பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் !


May 16, 2013

ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா?

ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? இது காலங்காலமாய் பெண்கள் பயின்று வந்த ஒரு மிகப் பெரிய சாஸ்திரம். ஆனால் ரொம்பவே சீக்ரெட்டான ஒரு சாஸ்திரம்.

எதற்கு இவ்வளவு ஒளிவு மறைவு என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த ரகசியத் தன்மைக்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. தன்னை ஒரு பெண் ஹேண்டில் செய்யப் போகிறாள் என்று தெரிந்தாலே... அட, ஆண்களை விடுங்கள்... குட்டிக் குட்டி குழந்தைகள் கூட பெரிதாக முரண்டு பிடித்து எப்படியாவது நழுவி தப்பித்துவிட முயலும் போது, இத்தனை வலிய, பெரிய ஆண், அப்படிச் செய்ய மாட்டார்களா? ஆகவே, ஆண்களை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான முதல் அஸ்திரமே இந்த ஒளிவு மறைவுதான்.

காட்டில் வாழும் மிகக் கொடிய விலங்குகளில் ஒன்று சிங்கம். சாதாரணமாக, சிங்கத்தைப் பார்த்தால் மனிதர்கள் ஓடிப் பதுங்கிக் கொள்வார்கள். மற்றபடி சிங்கம் மனிதர்களை மருந்துக்குக் கூட மதிக்காது. முடிந்தால் மிதித்துக் கடித்துக் குதறி தின்றுவிடும். ஆனால் அதே சிங்கத்தை சர்க்கஸில் சேர்த்து அதை ஒரு நெருப்பு வளையத்தினுள் குதிக்க வைக்க அதே மனிதனால் முடிகிறதே. எப்படி?

சாதாரண சிங்கம் நெருப்பைக் கண்டால் ஒதுங்கும். மனிதர்களைக் கண்டால் தாக்கும், இது தான் அதன் இயல்பு. ஆனால் இந்த சர்க்கஸ் சிங்கம் மட்டும் எப்படி மனிதன் சொன்னதைக் கேட்டு நெருப்பு வளையத்தினுள் குதிக்கிறது?

அதுதான் மனிதனின் சாதுர்யம். தன்னை விடப் பல மடங்கு வலிமையும், ஆக்ரோஷமும் கொண்ட ஒரு விலங்கை வெறும் சில உபாயங்களைக் கொண்டு அடக்கி, வழிக்குக் கொண்டு வருவதுதான் மனிதனின் சாமர்த்தியம்.

மனித ஆணும், மனிதப் பெண்ணை விட வலிமையானவன். ஆக்ரோஷம் மிக்கவன், அபாயகரமானவன். ஆனால், அந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அதே சாதுர்யத்தை சாதாரணப் பெண்களும் பயன்படுத்த பழகிக்கொண்டால், மனித ஆணும், சிங்கத்தைப் போலவே சாந்தமாய் மாறிப்போவான்.

அதெல்லாம் சரி. இந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அந்த சாதுர்யம்தான் என்ன? எடுத்த எடுப்பில் எந்த சர்க்கஸ் காரியும், ``ஏய் சிங்கமே, உன்னை நான் என்ன செய்கிறேன் பார். உன்னை ஹேண்டில் செய்ய கற்றுக் கொண்டு இதோ தெரிகிறது பார், இந்த நெருப்பு வளையம், அதன் உள்ளே உன்னைக் குதிக்க வைக்கப் போகிறேன்... தெரிந்துகொள்!'' என்று தன் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாய் போட்டு உடைப்பதே இல்லை. அதற்கு மாறாய் நெருப்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதை ஒரு வளைய வடிவில் வைத்திருப்பதாகவும் இந்த ஏற்பாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அவள் காட்டிக் கொள்வதே இல்லை.

அதற்குப் பதிலாய் சிங்கத்திடம் சாதாரணமாய் பழகுகிறாள். அதன் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறாள், வேளா வேளைக்கு தன் கையாலேயே உணவு பரிமாறுகிறாள். அதன் பக்கத்திலேயே இருந்து பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். இப்படி ஆரம்பித்து, அப்புறம் சிங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வரை காத்திருந்து பிறகு மெல்ல மெல்ல அதைப் பழக்கி, முதலில் சாதா வளையம், பிறகு சிவப்பு நிற வளையம், அப்புறம் தூரத்தில் கொஞ்சம் நெருப்பு, பிறகு பக்கத்தில் நெருப்பு, பிறகே வளைவில் நெருப்பு என்று மிகவும் நிறுத்தி நிதானமாகத் தானே செய்கிறாள்.

இவ்வளவு செய்யும் போதும் எந்தக் கட்டத்திலுமே தன் நோக்கத்தை அவள் சிங்கத்திடம் தெரிவிப்பதே இல்லை. அதனால்தான் சிங்கமும் தன் கெடுபிடியைத் தளர்த்தி, அவள் மனம் போல நடக்கப் பழகிக்கொள்கிறது.

இதற்கு மாறாக இவள் ஆரம்பத்திலேயே ``வா சிங்கம்... இந்த நெருப்பு வளையத்தினுள் போய் குதித்துவிடு'' என்று மிகவும் ஓப்பனாய் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தால், சிங்கம் அவளை அங்கேயே சிங்கிள் லபக்கில் விழுங்கியிருக்குமே.

அதனால் ஆண்களை ஹேண்டில் செய்யும் அரிய அஸ்திரங்களை கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் பழக வேண்டிய கலை, உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்று வெளியே காட்டிக் கொள்ளாத ரகசியம் காக்கும் திறமை.

``அதெல்லாம் முடியாது. என்னால் இப்படி எல்லாம் ரகசியம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நான் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். மனசுல பட்டதை பட்டு பட்டுனு செய்துதான் பழக்கம். இப்படி எல்லாம் ஒளிவு மறைவா என்னால் இயங்க முடியாது,'' என்று நீங்கள் நினைத்தால், வெல் அண்ட் குட், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், உங்களை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்ற இந்த கலையை கற்றுக்கொள்ளும் அடிப்படை தகுதி உங்களுக்கு இல்லை, அதனால் நீங்கள் இந்த ஆட்டத்திலிருந்து விலகிவிடுவதே நல்லது.

இல்லை. இந்தக் கலையை நான் கற்றுக்கொள்ளத் தான் விரும்புகிறேன். ஆனால் உள்நோக்கம் மறைத்துப் பழக்கமில்லை. எப்படிச் செய்வது என்று தெரியாது என்று தயங்குகிறீர்கள் என்றால் டோன்ட் ஒர்ரி. இது ரொம்ப சுலபம் தான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வையுங்களேன். அந்தக் குழந்தைக்கு ஜுரம் என்று மருந்து தர வேண்டியுள்ளதென்றால் அதை எப்படிச் செய்வீர்கள்? ``இந்தா புடி, மருந்தைக் குடி'' என்று நேரடியாகவா சொல்வோம்? அப்படிச் சொன்னால்தான் குழந்தை முழு சவுண்டில் சைரனை ஆரம்பித்துவிட்டு அங்கிருந்து ஜகா வாங்கி விடுமே!

தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளக் கூடிய பெரிய குழந்தை என்றால் உண்மையைச் சொல்லி குடிக்க வைக்கலாம். மிகவும் சின்னக் குழந்தை என்றால், எதுவுமே பேசாமல் குழந்தையை மடியில் போட்டு, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சங்கு நிறைய மருந்தை டபக் என்று குழந்தை வாயில் ஒரேயடியாக ஊற்றி, உடனே பாலைக் கொடுத்து குழந்தையை அப்படியே சமாதானப்படுத்துகிறவள்தான் சாமர்த்தியமான தாய்.

இப்படி அந்தத் தாய் குழந்தைக்கு தன் நோக்கத்தைத் தெரிவிக்காமல் மடார் என்று காரியத்தைச் செய்து முடிப்பது அந்தக் குழந்தைக்கு நன்மை தானே? அதைப் போலத்தான் இந்த `யுத்தி நம்பர் ஒன்று'ம், நீட்டி முழக்கி, விளக்கி, விவாதித்து முன்னறிவிப்புக் கொடுத்து எல்லாம் ஆண்களை நீங்கள் ஹேண்டில் பண்ண முடியாது. நீங்கள் பாட்டிற்கு இயல்பாக ஆண்களை அணுகுங்கள், உங்கள் உள்நோக்கம் வெளியே தெரியாதபடிக்கு. எப்படியும் ஆண்கள், ``இவள் வெறும் ஒரு பெண் தானே... இவளுக்கு அப்படி என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது'' என்று அஸால்ட்டாகத் தான் இருப்பார்கள். அநேக ஆண்களுக்குத் தான் தெரியாதே, எல்லா ஜீவராசிகளையும் போல், மனித வர்க்கத்தில் பெண் தான் ஆணை விட ரொம்ப பொல்லாதவள். என்று...

இந்த ``ஆஃப்டர் ஆல் பெண் தானே'' என்கிற அஜாக்கிரதையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் பெண்களுக்கு அட்வான்டேஜ் என்பதனால், `ஆண்களை ஹேண்டில் செய்யும் இந்தக் கலையின் முதல் பாடம் : `அடக்கி வாசியுங்கள்.' நீங்கள் ஹேண்டில் செய்யப் போகும் ஆணுக்கு கடைசிவரை தெரியவே கூடாது, அதுதான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உள்நோக்கம் என்று.

எங்கே இந்த முதல் பாடத்தை வெற்றிகரமாய் கடைப்பிடித்து, ஏதாவது சில ரகசியங்களை பத்திரமாய் காப்பாற்றிக் காட்டுங்கள், பார்ப்போம். `சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம்' என்பதை மட்டும் நீங்கள் பொய்ப்பித்துக் காட்டிவிட்டீர்கள் என்றால், நீங்கள் இந்த முதல் டெஸ்டில் பாஸ் என்றும், இனி வரும் அடுத்தடுத்த அஸ்திரங்களை கற்றுக் கொள்ள தகுதியானவர் என்றும் அர்த்தம். பார்த்துவிடலாமே, நீங்கள் பாஸா இல்லையா என்று!

No comments: